Saturday 26 November 2016

இப்பூவுலகை மிரட்டிக்கொண்டிருக்கும் ஆணவம் பிடித்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சோஷலிச சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ எனும் மாவீரன் நம்மை விட்டு மறைந்தார்..!

Image result for fidel castro

ஃபிடல் காஸ்ட்ரோ பிறப்பு:

கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். அதனால் சுகபோக வாழ்வில் ஃபிடலுக்கு குறைவேதும் இல்லை. இவர் இளைஞனாக இருந்தபோது, அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் கியூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார்.
நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" - 1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார்.
ஃபிடலின் புகழ்மிக்க பொன்மொழிகள்:
*இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான்புரட்சி!
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்!
*நீங்கள் என்னைக் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்!
*வர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
இப்போதும் கியூபாவில் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனைக் குழந்தைகளும் ஒருமித்தக் குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா
‘‘ எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் 'சே'-வைப்போல ஃபிடல் காஸ்ட்ரோ-வைப் போல இருப்போம்!” என்பதே.
மக்களின் தலைவர், சோசலிசத்தின் தந்தை, புரட்சியின் நாயகன் ஃபிடலை இழந்து தவிக்கும் கியூபா மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும், நமது நீலகிரி மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது, ஆம்...அந்த மாபெரும் தலைவரின் வழிகாட்டல் காற்றில் கலந்து வரும் காலங்களில் மக்களை வழிநடத்திக்கொண்டே இருக்கும்!
நீலகிரி மாவட்ட சங்கம்.


No comments:

Post a Comment